புதுடெல்லி: விஜயா, தேனா, பாங்க் ஆப் பரோடா வங்கிகளை இணைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை வலிமையாக்கும் வகையில் அவற்றை இணைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்கெனவே பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. வங்கிகளின் நிதிநிலையில் வராக்கடன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மொத்த வராக்கடனில் 90 சதவீத வராக்கடன் பொதுத்துறை வங்கிகள் சார்ந்தவை. நிதி நிலையில் பலவீனமாக வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைப்பது பற்றி மத்திய அமைச்சரவையிலும் பரிசீலிக்கப்பட்டது. அப்போது, இணைப்புக்கு சாத்தியமான வங்கிகள் பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவை இணைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டின் 3வது பெரிய வங்கியாக பாங்க் ஆப் பரோடா திகழ உள்ளது. இணைப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், இணைப்பு மூலம் வங்கிகள் வலுவடையும். அவற்றின் கடன் வழங்கல் தகுதி அதிகரிக்கும். ஊழியர்களை இது பாதிக்காது’’ என்றார்.