பெரியார் சிலையை அவமானப்படுத்த முயற்சிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

சென்னை: பெரியார் சிலையை அவமானப்படுத்த முயற்சி செய்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 மானமுள்ள ஒவ்வொரு தமிழரும் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளை இன்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். திமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே தலைவர் கலைஞர் நிறுவிய பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மானத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கைக்கு சமூகநீதி - சுயமரியாதை வெளிச்சம் பாய்ச்சிய பெரியாருக்கு நன்றி செலுத்தும் நாளில், சில ஈனப் புத்திக்காரர்கள் பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க விஷமத்தனமாகத் திட்டமிட்டு வெறிபிடித்த மிருகம் போல செயல்படுகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலையையும், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையையும் அவமதித்துள்ள கயமைத்தனத்திற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன் வாழ்நாளிலேயே இதுபோன்ற தாக்குதல்களை நேரடியாக எதிர்கொண்டு, அஞ்சாமல் போராடி, எதிரிகளைப் பொடிப் பொடியாக்கியவர் பெரியார். கடலூரில் அவர் மீது செருப்பு வீசப்பட்ட இடத்திலேயே பின்னர் அவருக்கு சிலை வைக்கப்பட்டு, அவர் முன்னிலையிலேயே அதனை கலைஞர் திறந்து வைத்தார் என்பது பெருமைமிகு வரலாறு.

அந்த வரலாறு அறியாத மூடர்கள் - திராவிட இயக்கத்தால் தமிழ்நாடு கண்டுள்ள சமுதாயப் புரட்சியை செரிமானம் செய்ய முடியாத மனநலன் பிறழ்ந்தவர்கள் அண்மைக்காலமாக இதுபோன்ற இழிவான, மலிவான, தரங்கெட்ட செயல்களை மதவெறி சக்திகளின் பின்னணியுடன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலமாக தமிழ்நாட்டில் நிலவுகின்ற ஒற்றுமை உணர்வை, மதநல்லிணக்கத்தை, சமூக நீதிக் கொள்கையை தகர்த்து, மதவாதப் பேயாட்டம் போடலாம் எனத் திட்டமிடுபவர்களை ஒட்ட நறுக்க வேண்டியது அவசியமாகும். தமிழின விரோதிகள் சிலர் சமீப காலமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை அதிமுக அரசு பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வளர விட்டு வேடிக்கை பார்ப்பது மிகவும் ஆபத்தான போக்கு.

இது பெரியார் மண் என்பது ஆள்பவர்களும் அறிவார்கள் என்பதால், தந்தை பெரியார் சிலையை அவமானப்படுத்த முயற்சித்து, அதன் மூலம் பொது அமைதியைக் குலைக்கத் திட்டமிட்டவர்களை ஒட்டுமொத்தமாக கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும், இது போன்ற செயல்களைத் தூண்டும் அமைப்புகளை சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெரியார் சிலைக்கு மரியாதை

140வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலை மலர்களால் அவங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 8.35 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், எம்.எல்.ஏ.க்கள் ஜெ. அன்பழகன், சேகர்பாபு, சுதர்சனம், ரங்கநாதன், கு.க.செல்வம், ரவிச்சந்திரன், தாயகம் கவி, தொ.மு.ச. பொதுச் செயலாளர் மு.சண்முகம், டி.கே.எஸ். இளங்கோவன், துறைமுகம் காஜா, பூச்சி முருகன், பரந்தாமன், நிர்வாகிகள் பாண்டி செல்வம், அன்புதுரை, ஐ.சி.எப். முரளி, மதன்மோகன், த.வேலு, அகஸ்டின். ரகமதுல்லா, சிதம்பரம், புழல் நாராயணன். சிம்லா, சண்முகநாதன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: