எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது போலீசாருடன் நடந்த வாக்குவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எச்.ராஜா தெரிவித்தார். அவரின் பேச்சு பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):  பெரியார் சிலை மீது செருப்பு வீசியவர் புத்தி சுவாதீனமில்லாதவர். அவரை  தூண்டியவரும் புத்தி சுவாதீனமில்லாதவர். அவர் மீது உடனடியாக காவல்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தின் உயர்ந்த அமைப்பான நீதிமன்றத்தை  அவமதித்து, வரம்பு மீறி பேசும் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய  வேண்டும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்): காவல்துறை குறித்து கேவலமாகவும், நீதிமன்றத்தை அவமதித்தும் எச்.ராஜா பேசி உள்ளார். அவரது செயல் தீவிரவாத நடவடிக்கை போல் உள்ளது. எனவே அவரை தீவிரவாத பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். நீதிமன்றம் அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

திருமாவளவன் (விசிக தலைவர்): ஒவ்வொரு நாளும் போகிற இடமெல்லாம் கலவரத்தைத் தூண்டி வருகிறார். உயர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் சொல்லத் தகாத வார்த்தைகளால் எச்.ராஜா வசை பாடியுள்ளார். தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அவரை கைது செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் எதுவும் வழங்கக்கூடாது. தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும். தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணை தலைவர்): 2019 தேர்தலை மனதில் கொண்டு பாஜகவினர் இவ்வருடம் விநாயகர் சதுர்த்தியை கலவரமாக்க திட்டமிட்டிருந்தனர்.

எச்.ராஜா புதுக்கோட்டையில் ஆடிய சாமியாட்டத்தை பார்த்தாலே அது தெரியவரும். நம்மை இந்த அரசும், காவல்துறையும் ஒன்றும் செய்யாது என்ற திமிர்த்தனமே எச்.ராஜா வகையறாக்களை எல்லை மீற வைக்கிறது. அமைதியை நாடும் இந்து சகோதரர்களும் ஜனநாயக, மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் தமிழகத்தின் அமைதியை பாதுகாக்க களமிறங்க வேண்டும். எச்.ராஜா போன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா  காவல்துறையினரையும், உயர் நீதிமன்றத்தையும் மிக தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து பேசியுள்ளார். எச்.ராஜாவின் இத்தகைய வெறியூட்டும் பேச்சுக்களை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து, மதவாத வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் எச். ராஜாவை உடடினயாக கைது செய்ய வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: