உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அக்.19ல் தசரா திருவிழா நடைபெறும் நிலையில் வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். உடன்குடி அடுத்த குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடுத்தப்படியாக இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா, 10ம் திருநாளில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். தசரா திருவிழாவில் பல்வேறு வேண்டுதல்களுக்காக பக்தர்கள் 71நாள், 51நாள், 41நாள், 21நாள், 11நாள் என விரதம் இருப்பர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கடலில் நீராடி சிகப்பு ஆடை அணிந்து முத்தாரம்மன் கோயில் அர்ச்சகரிடம் மாலை அணிந்து விரதம் துவங்குவர்.
இதேபோல் இந்தாண்டுக்கான தசரா திருவிழாவானது அக்.10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அக்.19ம் தேதி நள்ளிரவு சூரசம்ஹாரம் நடக்கிறது.
தசரா திருவிழாவை முன்னிட்டு வேடம் அணியும் பக்தர்கள் நேற்று விரதம் துவங்கினர். இதையடுத்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு ஹரிஷ் பட்டர்
மாலை அணிவித்தார். விரதம் இருக்கும் பக்தர்கள் காளி, குறவன், குறத்தி, குரங்கு, புலி, சிங்கம், கரடி, பெண், சிவன், பார்வதி, நரசிம்மர், அனுமான் மற்றும்
அரசியல் பிரமுகர்கள் வேடமணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து சூரசம்ஹாரத்தன்று கோயிலில் செலுத்துவர். இதையொட்டி திருவிழா நாட்களில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு, அம்மன் வீதியுலா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி