×

ஜோதிடர் ஆலோசனைப்படி 40 கோயில்களுக்கு அருகில் காப்பர் உருளை புதைத்தவர் கைது: ஓராண்டுக்கு பின் எடுக்க வந்தவர் தஞ்சையில் மக்களிடம் சிக்கினார்

சேதுபாவாசத்திரம்: ராமநாதபுரம் மாவட்டம் கோவிந்தநேந்தலை சேர்ந்தவர் முனியராஜ் (42). இவர் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அம்மணிச்சத்திரம் சுந்தர கோதண்ட ராமர் கோயில் பின்புறம் உள்ள புளிய மரத்தடி அருகே சில நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டினார். இதை பார்த்த கிராம மக்கள், சம்பவ இடத்துக்கு வந்து முனியராஜிடம் விசாரித்தனர். அதற்கு தனது தங்கையின் படிப்பு சம்பந்தமாக இந்த மண் தேவைப்படுவதால் பள்ளம் தோண்டுவதாக கூறியுள்ளார். அதற்கு அறநிலைத்துறையிடம் அனுமதி வாங்கி வந்து மண் எடுங்கள் என கூறியதுடன் அவரது முகவரியை பொதுமக்கள் வாங்கி வைத்து கொண்டனர். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் முனியராஜை செல்போனில் தொடர்பு கொண்டு மண் எடுக்க அனுமதி வாங்கி விட்டீர்களா என்று அம்மணிசத்திரத்தை சேர்ந்த ஒருவர் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் முனியராஜ் பேரம் பேசியுள்ளார். அதில் புளியமரத்துக்கு அடியில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு காப்பர் உருளையை  புதைத்து வைத்துள்ளேன்.

ஒரு அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட அந்த உருளை, ஓராண்டுக்கு பிறகு 5 அடி ஆழத்தில் சென்றுவிட்டால் அதன்மீது ஒரு ஈர்ப்பு சக்தி ஏற்பட்டு விடும். எனவே நான் காப்பர் கம்பியை எடுக்க வேண்டும். இதற்கு ஒத்துழைத்தால் தற்போது உங்களுக்கு ரூ15 ஆயிரம் தருகிறேன். மேலும் காப்பர் கம்பியை ஆய்வு கூடத்துக்கு அனுப்பி ஆய்வு செய்து விற்பனை செய்யும் தருவாயில் ரூ10 லட்சம் தருகிறேன் என்று முனியராஜ் பேரம் பேசியுள்ளார். இதற்கு சரியென முனியராஜிடம் கூறியதும் நேற்று (12ம் தேதி) வருவதாக கூறினார். இந்நிலையில் நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்த முனியராஜை விஏஓ செந்தில்குமார், பொதுமக்கள் பிடித்து காப்பர் உருளை புதைத்து வைத்த இடத்தை கேட்டனர்.

இதையடுத்து அவர் காண்பித்த இடத்தில் பள்ளம் தோண்டியபோது மூன்றரை ஆழத்தில் காப்பர் உருளை  இருந்தது. பின்னர் காப்பர் உருளையை கைப்பற்றி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் முனியராஜை விஏஓ செந்தில்குமார் ஒப்படைத்தார். இதையடுத்து முனியராஜிடம் சேதுபாவாசத்திரம் போலீசார் நடத்திய விசாரணையில், பட்டதாரியான முனியராஜிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதும், இவர் ஜாதகம் பார்த்ததின் அடிப்படையில் சுக்கிர திசை அடிக்கும் யோகம் உள்ளதால் ஜோதிடர் ஆலோசனையின் பெயரில் தமிழகத்தில் உள்ள 40 கோயில்களுக்கு அருகில் இதுபோன்று காப்பர் உருளையை புதைத்து வைத்துள்ளதும் தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bury copper cylinder arrested
× RELATED உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380...