×

தமிழ்கூறும் நல்லுலகின் தன்நிகரில்லாத்தலைவர் : வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

திராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில், ஐம்பது ஆண்டுகள் தலைமை பொறுப்பினை ஏற்று, உழைத்துக்கொண்டே இருந்த தமிழர்களின் சகாப்த நாயகர், தலைவர் கலைஞர். 82 ஆண்டுகள் பொதுவாழ்வில் இப்படி புடம்போடப்பட்ட தலைவரை இந்திய அரசியல் அரங்கில் எங்கும் காண முடியாது. என்னுடைய அரசியல் வாழ்வில் 29 ஆண்டு காலம் உயிரனையத் தலைவர் கலைஞரின் நிழலாக நின்றவன்.   சென்னைக்கு முதுகலை பயில மாநிலக்கல்லூரியில் அடியெடுத்து வைத்த காலத்தில், 1964 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா பாசறையில் இணைந்து மாணவர் படை தளகர்த்தர்களில் ஒருவனாக ஆனேன். பின்னர் சட்டக் கல்லூரியில் பயின்றபோது பேரறிஞர் அண்ணா சிலையைத் திறந்து வைத்திட முதல்வர் டாக்டர் கலைஞர்  வந்தபோது, அவருக்கு வரவேற்பு மடல் நானே தயாரித்து, விழாவில் வாசித்து அளித்தேன்.

கலைஞரின் சிறப்பு இயல்புகளைப் பொருளாக்கிய வாழ்த்து மடல்; இன்றும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றது. KARUNANIDHI- Kind in heart, Able administrator, Right thinking, Unifying factor, Narrator of History, Adventurous career, Noble leadership, Inspirator of Youth, Darling of the masses, Havenot’s friend, Invincible personality. தலைவர் டாக்டர் கலைஞர் கோபாலபுரம் இல்லத்தில் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறையில் 1969-89 வரை இருபது ஆண்டுகள் இந்த வாழ்த்து மடல் மட்டுமே சுவற்றை அலங்கரித்தது. 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் தமிழ் இளைஞர்களின் குருதியை சூடேற்றி களம் காண்பதற்கு வித்திட்ட கலைஞரின் வீர முழக்கத்தை இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் 1969 ஆம் ஆண்டு திமுகவின் தலைமைப் பொறுப்பு அண்ணன் கலைஞரை தேடி வந்தது. 1974 ஏப்ரல் 20 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முதல்வர் கலைஞர் நிறைவேற்றினார்.

நாட்டு விடுதலைக்குப் பின்னர் மாநில சுயாட்சிக் குரல் முதன் முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்தில்தான் எழுந்தது. 1969 இல் முதன் முதலில் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கலைஞர் அவர்களுக்கு, 5 முறை தமிழகத்தின் முதல்வராகப் பணியாற்றும் வாய்ப்பை தமிழக மக்கள் வழங்கினார்கள். மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய ‘நீராருங் கடலுடுத்த’ என்று தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாட வேண்டும் என்று ஆணையிட்டது கலைஞர் அரசு. விடுதலை நாள் விழாவில் சென்னைக் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை நிலைக்கச் செய்தவர் என்பதை வரலாறு கூறிக்கொண்டே இருக்கும். 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெண்ணுக்கு சொத்து உரிமை வழங்க வேண்டும் என்று தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தை 60 ஆண்டுகளுக்குப் பின்னர் செயல்படுத்தியதும் கலைஞர் அரசுதான். தொழில்துறை குறிப்பாக வாகன உற்பத்தித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கும் வித்திட்டதும் கலைஞர்தான். நில உச்சவரம்புச் சட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பேருந்துகள் நாட்டுடமை, கண்ணொளி வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர் கலைஞர். ஏழை, எளியவர்கள் கல்வி அறிவு பெற புதுமுக வகுப்புவரை இலவசக் கல்வி, மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு ரத்து போன்றவை கலைஞர் அரசின் சாதனைகள்தான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nallulak tamilkurum the tannikarillattalaivar, Vaiko
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...