காரைக்குடி: புது நெல் வரத்து ஓரளவு உள்ளதால் புதிய அரிசியின் விலை குறைய வாய்ப்புள்ளது என, அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல், பள்ளத்தூர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. ஆவுடையார்கோவில், தஞ்சை, திருவாடானை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காஞ்சிபுரம், மதுரை, பட்டுக்கோட்டை மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து இங்கு நெல் அரவைக்கு கொண்டு வரப்படுகிறது. தினமும் ஆயிரம் டன்னுக்கு மேல் நெல் கொண்டு வரப்படுகின்றது. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரிசி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது இங்கிருந்து செல்லும் அரிசி வகைகளான (ஒரு கிலோ அளவில்) அதிசய பொன்னி 30, டீலக்ஸ் பழையது முதல் ரகம் 46, புதியது 42, சி.ஆர் 28, அதிசயபொன்னி புதியது 30, கல்சர் பழையது 33, ஏடிடி புதியது 28க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பள்ளத்தூரை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘பொன்னி ரக அரிசிகளையே மக்கள் அதிகளவில் விரும்பி வாங்குவர். இந்த ரக நெல் ஆவுடையார்கோவில், ராமநாதபுரம் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும். இந்த ஆண்டு இப்பகுதிகளில் போதிய விளைச்சல் இல்லை. இதனால் போதுமான வரத்து இல்லை. கர்நாடகாவில் இருந்துதான் பொன்னி வாங்கப்படுகிறது. தற்போது புதிய நெல் வரத்து ஓரளவு உள்ளது. எனவே புதிய அரிசியின் விலை குறைய வாய்ப்புள்ளது. பழைய அரிசியின் விலையில் எந்தவித மாற்றமும் வர வாய்ப்பு இல்லை,’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி