புதுடெல்லி: ‘பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தழுவலாம். ஆனால் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ராகுலை மக்கள் அரவணைக்க மாட்டார்கள்’ என்று பாஜ நிர்வாகி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பாஜ கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அனில் பலுனி, டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வருகிற மக்களவைத் தேர்தலில் வெற்றிப்பெற்று பிரதமராக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கனவில் மிதக்கிறார். மக்களவையில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின்போது பிரதமர் மோடியை ராகுல் வலுக்கட்டாயமாக கட்டியணைத்தார்.
ஆனால் வரும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தியை மக்கள் அரவணைக்க மாட்டார்கள். வரும் 2024ம் ஆண்டிலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, இப்போதே ராகுல்காந்தி தயாராகிக் கொள்ளலாம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி, ஊழலை அதிகரிப்பதை லட்சியமாக கொண்டு செயல்பட்டது. தற்போதைய பாஜ அரசு, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!