சென்னை: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் 3-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் காய்கறிகள் மற்றும் விவசாய பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக கொண்டு செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு, ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வேண்டும், 3ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள், மினிலாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் கனரக வாகனங்களும், 1.5 லட்சம் மினி வேன்களும் இயங்கவில்லை. இந்த வேலைநிறுத்தத்தில் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் பங்கு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை மத்திய-மாநில அரசுகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். லாரிகள் ஓடாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சென்னை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளுக்கு கொண்டு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்யாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!