×

வேறு பெண் பெயரை பச்சை குத்தியதால் காதல் கணவனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய மனைவி : வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியாகி பரபரப்பு

கோவை :  கோவையில், வேறு பெண் பெயரை பச்சை குத்தியதால் நடுரோட்டில் கணவனை இளம்பெண் சரமாரியாக தாக்கிய வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவுகிறது. கோவை சாயிபாபாகாலனி அருகேயுள்ள ஒரு கோயிலுக்கு  நேற்று காலை 25  வயதான கணவன், 21 வயதான மனைவி இருவரும் ஜோடியாக சாமி  கும்பிட வந்தனர்.  அப்போது திடீரென மனைவி கணவனின் கன்னத்தில் அறைந்து  தாக்கினார். தொடர்ந்து  அவரை அடித்து உதைத்து ஆவேசமாக  தாக்கி  கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் வந்து விலக்க முயன்றபோதும் அவர்  விடவில்லை. இதுகுறித்து சாயிபாபாகாலனி போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. சம்பவ  இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணை தடுத்து நிறுத்தி  விசாரித்தனர். அந்த பெண்,  ‘‘கிணத்துக்கடவில் என்னோட வீடு  இருக்கு. நான் கூலி வேலைக்கு போகும்போது  வழியில் சில மாதம் முன்னாடி இவரை  பார்த்தேன். என்னை காதலிப்பதாக சொன்னாரு.  நம்பி இவர் கூட பழகினேன். 5  நாளுக்கு முன்னாடி கோயில்ல வெச்சு எனக்கு தாலி  கட்டினாரு.

கல்யாணம் முடிஞ்ச பிறகு அவரோட நடவடிக்கையில்  சந்தேகம் வந்துருச்சு. யார்  கூடவோ ரகசியமாக செல்போன்ல பேசினாரு. கையில்  ஒரு பெண்ணோட பேரு  எழுதியிருந்தாரு. அது யார், என்ன உறவுன்னு கேட்டா எந்த  பதிலும் சொல்லலை,  அப்புறம் என்னை விட்டுட்டு திடீர்னு துடியலூர்  போயிட்டாரு. அவர தேடி  புடுச்சி கேட்டேன். கையில பச்சை குத்தியிருந்தது  முன்னாள் காதலியோட  பேருன்னு சொன்னாரு.  என் கணவருக்கு ஏற்கனவே கல்யாண  ஆயிருச்சு,  குழந்தையிருக்குன்னு சொல்றாங்க. எல்லாத்தையும் மறைச்சு ஏமாத்தி  என்னை  கல்யாணம் பண்ணிட்டாரு. கோயில் வெச்சு சத்தியம் கேட்டப்போ தான்  உண்மைய  சொன்னாரு. அதனால ஆத்திரம் தாங்காம அடிச்சேன்’’ என்று கூறினார். அவரது கணவனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சில பெண்களை  காதலித்து  வருவது தெரியவந்தது. பொது இடத்தில் கணவனை அடித்து உதைக்கவேண்டாம் என   அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ரோட்டில் கணவனை  மனைவி  தாக்கிய சம்பவத்தை அந்த பகுதியில் உள்ள சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்,  பேஸ்புக்கில் வெளியிட்டனர். இது, வைரலாக பரவி வருகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...