×

அணை இருப்பு: காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை

புதுடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 2வது கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. காவிரி விவகாரத்தில் நான்கு மாநிலத்தின் நதிநீர் பங்கீடு பிரச்சனையை தீர்க்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. இதில், காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு என அமைத்து தனித்தனியாக 9 பேர் கொண்ட உறுப்பினர்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஆணையத்தின் தலைவராக மசூத் உசேனும், ஒழுங்காற்று குழுவின் தலைவராக நவீன்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில்  காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் முதல் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லி ஆர்கே.புரத்தில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நேற்று 2வது கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பாக முதன்மை பொறியாளர் செந்தில் குமார் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மாநில நீர் விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கூட்டத்தில், மாநிலங்களில் உள்ள அணைகளின் பராமரிப்பு, அணை கட்டுப்பாடு, பாதுகாப்பு மற்றும் பராமரித்தல், ஒழுங்காற்று குழுவின் தலைமை அலுவலகத்தை பெங்களூருவில் அமைப்பது, அணை பராமரிப்பு அதிகாரிகளை நியமிப்பது, அணைகளுக்குக்கான மாநிலங்களின் அதிகாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கர்நாடக மாநில அணைகளில் உள்ள நீரை எவ்வாறு அளவிடுவது போன்ற முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒழுங்காற்று குழுவின் அடுத்தக்கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது’’ என்றார்.

கேரளா சீராய்வு மனு தள்ளுபடி


காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு தரப்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “காவிரியில் இருந்து எங்களுக்கு வழங்கப்படும் 30 டிஎம்சி தண்ணீரை நாங்கள் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதி வேண்டும்.

மேலும் கேரளாவிற்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்கவும் அனுமதிக்க வேண்டும். இதைத்தவிர மற்ற மாநிலங்களை விட கேரளாவிற்கு குறைவான தண்ணீர் தான் திறந்து விடப்படுகிறது. அதனால் காவிரி ஆணையத்தை அமைக்கும் விவகாரத்தில் அதன் செலவு தொகையை பங்கீட்டு அளவை எங்களுக்கு குறைக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று பரீலனை செய்த உச்ச நீதிமன்றம், மனுவில் முகாந்திரம் இல்லை என தெரிவித்து தள்ளுபடி செய்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...