×

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக பிரதிநிதிகள் நியமனம்: அமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி

பெங்களூரு: காவிரி ஆணையத்தின் மூலமாக மாநிலத்திற்கு அநியாயம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே கர்நாடகத்தின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் டிகே சிவகுமார் கூறினார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சார்பிலும் ஆணையத்தின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலத்தின் சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை. கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி காவிரி ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்யும் வகையில் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மாநில தலைமை வழக்கறிஞரிடம் விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.  

 கடந்த வாரம் காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் அதன் பிரதிநிதிகள் கூட்டம் விரைவில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதிகள் மட்டும் இல்லை என்பதால் அது மாநிலத்திற்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதால் நேற்று முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் அவசர கூட்டம் நடந்தது. விதான சவுதாவில் நடந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டிகே சிவகுமார், துணைமுதல்வர் பரமேஸ்வர், மாநில அரசு தலைமை வக்கீல் உதய்ஹொள்ளா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரம் இக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் டிகே சிவகுமார் கூறியதாவது: காவிரி ஆணையத்தை மத்திய அரசு இரவோடு இரவாக அமைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சட்ட ரீதியாக போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதிகள் மட்டும் நியமிக்கப்படவில்லை. காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவின் முதல் கூட்டம் விரைவில் நடைபெறும். அக்கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதிகள் இடம் பெறவில்லை என்றால் அது நமக்கு பாதகமாகும். எனவே, காவிரி ஆணையத்தின் கர்நாடக பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு தலைமை வக்கீல் உள்பட சட்ட நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர். அதை தொடர்ந்து உறுப்பினராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்தோம்.

காவிரி ஆணையத்தின் கர்நாடக மாநில பிரதிநிதியாக மாநில நீர்ப்பாசனத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங்கும், காவிரி ஆணைய ஒழுங்காற்று குழுவில் மாநிலத்தின் பிரதிநிதியாக காவிரி நீர்ப்பாசன கழகத்தின் நிர்வாக இயக்குநர்  பிரசன்னாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை மதிக்கவேண்டும் என்பதால் மாநில அரசின் சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுக்கு மாநிலத்தின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் மத்திய அரசு இவ்விஷயத்தில் மாநிலத்திற்கு துரோகம் இழைத்துவிட்டது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். பெங்களூருவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா ஆதரவு அளிப்பார் என நம்புகிறோம் என்றார்.

* கடந்த வாரம் காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் அதன் பிரதிநிதிகள் கூட்டம் விரைவில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
* கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதிகள் மட்டும் இல்லை என்பதால் அது மாநிலத்திற்கு பாதகமாக அமைந்துவிடும்
* காவிரி ஆணையத்தை மத்திய அரசு இரவோடு இரவாக அமைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சட்ட ரீதியாக போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
* காவிரி ஆணையத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.....