பெங்களூரு: காவிரி ஆணையத்தின் கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கர்நாடக உறுப்பினராக பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு காவிரி ஒழுங்காற்று குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் கடந்த 22ம் தேதி கர்நாடகம் இதுவரை பிரநிதியை அறிவிக்கவில்லை என்பதால் மத்திய அரசே தற்காலிக உறுப்பினரை நியமித்தது. மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்கள் என 9 உறுப்பினர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகம் தரப்பில் தலைமை பொறியாளர் செந்தில்குமார் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். கேரளா தலைமை பொறியாளர் கே.ஏ. ஜோஷி, புதுவை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் ஒழுங்காற்று குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தமது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தங்களைக் கேட்காமல் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை நியமித்து விட்டதாகவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டினார். இந்நிலையில் ஆணைய உறுப்பினர் குறித்து பெங்களூரில் இன்று மாலை முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குபின்பு கர்நாடக மாநில சார்பில் காவிரி ஆணைய உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக பிரசன்னா ஆகிய 2 பேரை முதல்வர் குமாரசாமி நியமித்துள்ளார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!