வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நேற்று சூறைக்காற்று வீசியது. மேலும் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது.
இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடற்கரையில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். 2வது நாளாக இன்றும் காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஓய்வில் உள்ளனர். இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக புழுதிக்காற்று வீசி வருகிறது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கண்களில் தூசி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த புழுதிக்காற்றால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வேதாரண்யம் பகுதியில் இந்தாண்டு புழுதிக்காற்று வேகமாக வீசி வருவதாக மக்கள் கூறுகின்றனர். நேற்று முன்தினம் முதல் தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசிவருகிறது. இதனால் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்ல வேண்டிய சுமார் 220 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 81 விசைப்படகுகளில் 40 படகுகள் மட்டுமே கடலுக்கு சென்றன.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!