சென்னை: திருப்பூர் அருகே பிடிப்பட்ட ரூ.570 கோடி பற்றிய சிபிஐ அறிக்கை நகல் கோரி திமுக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. நீதிபதி சுப்பையா முன் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் முறையிட்டார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பணம் பிடிப்பட்டது. எந்த ஒரு ஆவணமும் இன்றி கண்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக பிடிப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்த திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீமன்ற நீதிபதி சுப்பையா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கின் இறுதியில் சிபிஐ அறிக்கை ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் ரூ.570 கோடி பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்றும், அதன் கோவை கிளையில் இருந்து விசாகபட்டினம் கிளைக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணை அறிக்கையின் நகல் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று திமுக சார்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுப்பையா இது குறித்து நான் அடுத்தவாரம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!