×

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் : வானிலை மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் தென் பகுதியிலும், மேற்கு பகுதியிலும் மழை பெய்ய துவங்கியுள்ளது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வடதமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையின் சில இடங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:


தமிழகம் மற்றும் புதுவையில் மீனவர்கள் கடலுக்கு பாதுகாப்பாக செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தென்மேற்று மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. மேலும் குளச்சல் முதல் கோடியக்கரை வரை 3.5 முதல் 4.4 மீட்டர் வரை அலைகள் உயரமாக எழும்பும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில்...