×

80 கோடி மதிப்புள்ள 8 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கு...... 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

காஞ்சிபுரம்:  80 கோடி ரூபாய் மதிப்பிலான 8 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் சென்னை அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் ராமானுஜபுரம் கிராமம் மணிகண்டேஷ்வரர் கோவிலில் இருந்து 2015ம் ஆண்டு சிவன் பார்வதி உலோக சிலைகள் களவு போனது.

இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவுந்திரியபுரம் ஆதிகேசவபெருமாள் கோவிலில் இருந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் சிலைகள் கடத்தப்பட்டன. வந்தவாசி அருகே உள்ள பையூரில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேஷபெருமாள் ஆலயத்தில் இருந்தும் 2015ம் ஆண்டு பிரசன்ன வெங்கடேஷ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சக்கரத்தாழ்வார் ஆகியோரின் சிலைகள் களவாடப்பட்டன.

3 ஆண்டுகள் தலைமைறைவு
இந்த எட்டு சிலைகளையும் கடந்த 2015ம் ஆண்டு மே 14ம் தேதி விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் தனலிங்கம் என்பவர் சென்னை மேற்குமாம்பலம் சி.எஸ்.ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் துரத்திச் சென்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் உதவி ஆய்வாளர் ஜூலியஸ் சீசர் ஆகியோர் மடக்கினர். மேலும் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான காவாங்கரை ஜெயக்குமாரை போலீசார் மூன்று ஆண்டுகளாக தேடி வந்தனர்.

சொந்த பணத்தை சன்மானமாக அளித்த பொன்.மாணிக்கவேல்
2015ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வரும் ஜெயக்குமார் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த ஜெயக்குமார் சென்னை அருகே செங்குன்றத்தில் பதுங்கியிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஜெயக்குமாரை கைது செய்தனர். ஜெயக்குமார் குறித்து தகவல் அளித்தவர்களுக்கு பொன்.மாணிக்கவேல் தனது சொந்த பணத்தை வெகுமதியாக கொடுத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை