×

மாற்றுத்திறனாளி நலனுக்காக பணிபுரிபவர்களுக்கு விருதுகள் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளுக்கான  தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள்  மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, சுதந்திர தின விழா அன்று விருதுகள் வழங்கப்பட உள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு10 கிராம் தங்கப் பதக்கம்,  ரூ.25,000 ரொக்கப்  பரிசு மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு10 கிராம் தங்கப்பதக்கம்,  ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்,    மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக  அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு    10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு  சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளருக்கு10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கிக்கு10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கான விண்ணப்பப்படிவங்களை மாற்றுத்திறனாளிகளுக்கான  மாநில ஆணையர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில  ஆணையரகம், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை-5 அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலரிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன்  வருகிற 27ம் தேதி பிற்பகல் 5.45 மணிக்குள்  சம்பந்தப்பட்ட மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.

விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு விருதுகள் சுதந்திர  தினவிழாவில் முதல்வரால் வழங்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...