×

வங்கி கணக்கில் இருந்து ரூ100 கோடி பரிமாற்றம் : சிபிஐ, ரிசர்வ் வங்கியில் புகார் அளிக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் முடிவு

சூலூர் : கடந்த 6 மாதங்களில் பெண்களின் சேமிப்பு கணக்கில் ரூ100 கோடிக்கு பரிமாற்றம் நடந்தது குறித்து, மகளிர் சுயஉதவி குழுவினர், சி.பி.ஐ. மற்றும் ரிசர்வ் வங்கியில் புகார் அளிக்க உள்ளனர். கோவை அவிநாசி ரோடு, நீலாம்பூரில் கனரா வங்கி கிளையில் உள்ளது. இங்கு மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 750 பெண்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது வங்கியில் ரூ50 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை கடன் பெற்று தவணை முறையில் கடனை திரும்ப செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பெண்களின் பாஸ்புக்கில் இருப்பு தொகை அச்சிட்டு தரப்படவில்லை. இதையடுத்து, அனைத்து பாஸ் புத்தகங்களையும் எடுத்து சென்று ஓராண்டுக்கு வரவு, செலவுகளை பதிவு செய்து தரும்படி வற்புறுத்தினர். அதன்பிறகு, பாஸ் புத்தகத்தில் பணம் போட்டது, எடுத்தது போன்ற விபரங்கள் பதிவு செய்து தரப்பட்டது. அதைவாங்கி பார்த்த போது கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஒவ்வொருவரது கணக்கிலும் குறைந்தபட்சம் ரூ5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ20 லட்சம் வரை செலுத்தப்பட்டது தெரியவந்தது.

கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் இரண்டு நாளில் வேறு வங்கி கணக்கு மாற்றப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழு பெண்களின் வங்கி கணக்குகளை வைத்துக் கொண்டு சுமார் ரூ100 கோடிக்கு முக்கிய அமைச்சர் ஒருவருக்கு பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மக்கள் கேட்டபோது, வங்கியின் கிளை மேலாளர் பதில் கூற மறுத்து விட்டார். இந்தநிலையில், பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கி மற்றும் சிபிஐயில் புகார் தெரிவிக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இந்த வங்கியின் கோவை மண்டல மேலாளர் கணேசன் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு வந்த மகளிர் சுயஉதவி குழுவினர் கணேசனை முற்றுகையிட்டு, அனுமதியில்லாமல் நடந்த வங்கி பரிமாற்றம் குறித்து கேட்டனர். அதற்கு கணேசன், `இந்த பணம் பரிமாற்றம் முற்றிலும் தவறானது. இதுதொடர்பாக நீலாம்பூர் கிளை மேலாளர் ராதா மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...