×

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு : தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்

ஸ்ரீவைகுண்டம்: அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருந்த தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். உடன்குடியில் இருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. கடந்த செவ்வாய் மற்றும் புதனன்று நடத்தப்பட்ட காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு இன்று தான் தூத்துக்குடியிலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. . தூத்துக்குடி - நெல்லை வழித்தடத்தில் போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.

முன்னதாக தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட்  ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதிக்கக் கூடாது எனக்கோரி தூத்துக்குடி  அருகேயுள்ள குமரெட்டியாபுரம் மக்கள் கடந்த பிப்ரவரி 12ம் தேதி காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து ஆலையை முற்றிலும் மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மீளவிட்டான், மடத்தூர், பண்டாரம்பட்டி, சில்வர்புரம் உள்ளிட்ட 17 இடங்களில் போராட்டம் நடந்தது.போராட்டத்தின் 100வது நாளான கடந்த 22ம் தேதி போராட்டக் குழுவினர் கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இது  தொடர்பாக அப்போைதய கலெக்டர் வெங்கடேஷ், எஸ்பி மகேந்திரன் ஆகியோர் நடத்திய  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு  பிறப்பித்து கலெக்டர் உத்தரவிட்டார். போராட்டத்தை ஒடுக்குவதற்கு 2  ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும் தடையை மீறி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல அலுவலகங்கள் தீக்கிரையாகின. அப்போது போலீசார் எந்திர துப்பாக்கியால் சராமரியாக சுட்டனர்.

இதில் முதல் நாளே 2 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 2ம் நாளாக அண்ணாநகரில் நடந்த துப்பாக்கி சூட்டில்  ஒருவர் பலியானார். சிகிச்சையிலிருந்த மேலும் 2 பேர் இறக்கவே பலி எண்ணிக்கை 13 ஆனது. இதையடுத்து துப்பாக்கி  சூட்டிற்கு காரணமாக தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ், எஸ்பி மகேந்திரன்  ஆகிய இருவரும் மாற்றப்பட்டு கலெக்டராக சந்தீப் நந்தூரி, எஸ்பியாக முரளி  ராம்பா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். நிலைமையை சமாளிக்கவும், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, டேவிதார், ஏடிஜிபி விஜயகுமார் மற்றும் ஐஜிக்கள் சைலேஷ்குமார் யாதவ், வரதராஜூ, சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க  தமிழக அரசு அனுமதிக்காது. அரசின் முடிவை ஏற்று பொதுமக்கள் தங்கள்  போராட்டத்தை கைவிட்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்தார். அங்கு இயல்பு நிலை திரும்ப வழிவகை செய்யும் நடவடிக்கையாக இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கிடையே நெல்லைக்கு அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இன்னும் இயல்பு நிலை முற்றிலும் திரும்பாத நிலையில் தற்போது அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு...