×

தூத்துக்குடி மருத்துவமனைக்கு சென்ற விவகாரம்: ஸ்டாலின் உட்பட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி மருத்துவமனைக்கு சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறி அதிக வாகனங்களில் சென்றதாக மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல், ஜி.கே.வாசன், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி 143, 188 மற்றும் 153(ஏ) பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தினர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் 100-வது நாளையொட்டி, மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாகச் சென்று மனுக்கொடுக்கச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில், மிகப்பெரிய வன்முறை வெடித்தது.

இதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அவர்களை சந்திக்க நேற்று பல அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதலும், நிதி உதவியும் அளித்தனர்.  தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி அரசியல் கட்சி தலைவர்கள் அதிக வாகனங்களில் சென்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...