சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், மற்றும் காவல் துறை உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக முழுமையாக ஒருநபர் கமிசன் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே கைது செய்ய திட்டம்
போராட்டம் நடத்த உள்ள அமைப்புகளின் நிர்வாகிகளை முன்கூட்டியே கைது செய்ய திட்டமிடப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகையால் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளை முன்கூட்டியே கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள காவல்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கையாய் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த இடத்திலும் போராட்டங்களை அதிகரிக்க விடாமல், அதனை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளுக்கும் எடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!