×

ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி: அதிபர் புடினை சந்திக்கிறார்

புதுடெல்லி: ரஷ்யா அதிபர் புடினின் அழைப்பை ஏற்று, ஒரு நாள் பயணமாக டெல்லியில் இருந்து ரஷ்யாவுக்கு விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது, இருதரப்பு பிரச்சினைகள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், இந்தியா மற்றும் ரஷியாவுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, பிரிக்ஸ் மாநாடு விவகாரங்கள் ஆகியவை பற்றியும் அவர்கள் விவாதிக்கிறார்கள். மேலும், ரஷியா மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடையால், இந்தியா-ரஷியா பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியா-ரஷியா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது, கொரிய தீபகற்ப நிலவரம் ஆகியவை பற்றியும் பேசுகிறார்கள்.

தனது ரஷ்ய பயணம் குறித்து டுவிட்டரில் மோடி பதிவிட்டதாவது, ரஷ்ய மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதிபர் புடினை சந்திப்பது மகிழ்ச்சி தருவதாகவும், இந்த சந்திப்பினால் இருநாடுகளுக்கும் இடையேயான நட்புணர்வு மேலும் வலுப்பெறும் என நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மோடியின் கொத்தடிமையாக செயல்படும்...