×

கொரிய அதிபர்கள் மூன் ஜே இன் - கிம் ஜோங் உன் சந்திப்பு : அணு ஆயுத விலகல், இருநாட்டு உறவுகள் மேம்பாடு குறித்து பேச்சு

பான்முன்ஜோம்: தென்கொரிய அதிபர் மூன் ஜேவை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொரியா போருக்கு பின் முதன் முறையாக வடகொரியா தலைவர் ஒருவர் தென்கொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 2 நாடுகளின் எல்லையில் உள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத விலகல், இருநாட்டு உறவுகள் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்த கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆனபின்னும் வடகொரியா அதிபர்கள் யாரும் தென்கொரியா செல்லவில்லை. இந்தநிலையில் 2011ல் வடகொரியா அதிபர் பதவியை ஏற்ற கிம் ஜோங் உன் அடுத்தடுத்து உலக நாடுகள் எச்சரிக்கையை மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனையை நடத்தி அமெரிக்கா, ஜப்பான் உள்பட அனைத்து நாடுகளையும் பதற வைத்தார்.

இதுவரை 6 அணு ஆயுத சோதனை நடத்தி உள்ளார். மேலும் கடைசியாக நடத்திய ஏவுகணை சோதனை, வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் எந்த ஒரு பகுதியையும் தாக்கக்கூடிய சக்தி பெற்றதாக இருந்தது.இதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னை சமரசப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் சியோலில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்  போட்டியில் வடகொரியா வீரர்கள் கலந்து கொண்டனர். கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங்கும் அரசு பிரதிநிதியாக தென் கொரியா சென்றார். அதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச வடகொரியா அதிபர் சம்மதித்தார். மே மாதம் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இதனிடையே இன்று தென்கொரிய அதிபர் மூன் ஜேவை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags :
× RELATED பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை...