மதுரை: மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற ஒரு சிறுமி, 3 சிறுவர்கள் என 4 பேர் மூழ்கி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை சிலைமான் அருகே அனஞ்சியூரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது வீட்டுக்கு விடுமுறைக்காக உறவினர்கள் வந்திருந்தனர். ரங்கசாமியின் மகள் சுபாஷினி (8), திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கந்தப்பக்கோட்டையை சேர்ந்த சந்தானம் மகன் கிஷோர் (13), மதுரை அச்சம்பத்தை சேர்ந்த மாரிகணேஷ் மகன்கள் அமுதகவி (6), பரத்சூர்யா (12) ஆகியோர், அருகில் இருந்த கண்மாய்க்கு நேற்று மாலை குளிக்க சென்றனர்.
அப்போது ஆழமான பகுதியில் சென்ற சிறுவர்கள், ஒருவரை ஒருவர் மீட்க முயன்று கடைசியில் 4 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி இறந்தனர். நீண்டநேரமாகியும் குழந்தைகள் திரும்பாததால் பெற்றோர் ஊர் முழுக்க தேடினர். முடிவில் கண்மாய் பகுதிக்கு சென்றபோது, குழந்தைகளின் ஆடைகள் கரையில் கிடந்தது தெரிந்தது. அந்த பகுதியில் தேடியபோது கண்மாய்க்குள் மூழ்கியும், சகதிக்குள் சிக்கியும் 4 பேரும் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில் சிலைமான் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 4 சிறுவர்கள் இறந்ததால், அனஞ்சியூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. தனது இரு குழந்தைகளையும் பறிகொடுத்த மாரிகணேஷ் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.