×

ஜனநாயக நெறிமுறைகளுக்கு சவால்விடும் ஆரோக்கியமற்ற முன்மாதிரிகளை கவர்னர் உருவாக்கி வருகிறார்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஜனநாயக நெறிமுறைகளைகளுக்கு சவால்விடும் ஆரோக்கியமற்ற முன்மாதிரிகளை கவர்னர் உருவாக்கி வருகிறார் என்று திமுக  செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்  மக்களாட்சி மாண்புகளுக்கும், மரபுகளுக்கும், மாநில  உரிமைகளுக்கும் எதிராக செயல்படுவதை கண்டித்து, ஆளுநர் வருகை தரும் மாவட்டங்களில் தி.மு.கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி போராட்டங்கள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான ஊழல்  குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, ஆட்சி திருப்திகரமாக நடைபெறுகிறது என்று ‘நற்சான்றிதழ்’ வழங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை  எழுப்புவதாக அமைந்திருக்கிறது.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில், நாளும் பெருகிவரும் ஊழல்கள் மாநில மக்களிடமும், ஊடகங்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவை  என்பதுடன், வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களாலேயே ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு  வருகின்றன. தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விற்பனை செய்ய அனுமதித்ததில், எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில்  இடம்பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகரக் காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ்  உள்ளிட்டோரின் பெயர்கள் குட்கா முதலாளிகளின் டைரி குறிப்பிலேயே இடம்பெற்று, அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி வருமானவரி  புலனாய்வுத்துறையினர், தலைமைச் செயலாளர் வரை தகவல் தெரிவித்துள்ளதற்குக் கடித ஆதாரங்களே உள்ளன.

அதுபோலவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தில், முதல்வர் தொடங்கி பல அமைச்சர்களும் சம்பந்தப்பட்டிருப்பதற்கான  விவரக்குறிப்புகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டில் சிக்கியுள்ளன. அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும்  ரெய்டுகளுக்கு உள்ளாகி, ஆதாரங்களுடன் அம்பலப்பட்டு அவமானப்பட்டு நிற்பதை, ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களே முழுவதையும் தெரிந்து  வைத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல்களுக்கு ஆதாரம் இல்லை என ஆளுநர் பேட்டியளித்திருப்பது ஆச்சரியமானது மட்டுமல்ல,  உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது. ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல. அவர் மத்திய அரசின் நியமனப் பிரதிநிதி மட்டுமே. அதனால்தான், காவிரி  மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் பெற்றுத் தருமாறு தி.மு.க.வும், தோழமைக் கட்சியினரும் ஆளுநரை நேரில்  சென்று வலியுறுத்தினோம்.

ஆனால், தமிழகத்தின் ஆளுநராக அவர் பொறுப்பேற்றதிலிருந்து, தான் மத்திய அரசின் பிரதிநிதி மட்டுமே என்பதை மறந்து, மாநில அரசின்  அதிகாரத்திற்கும், அமைச்சரவை கூட்டுப்பொறுப்புக்கும் சவால்விடும் வகையில், தன்னிச்சையாக பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுடன் சமரசம் செய்துகொண்டு, ஆட்சியாளர்களை மகிழ்வித்திடும் வகையில், ‘நற்சான்றிதழ்’ வழங்கி ஆளுநர்  பன்வாரிலால் பேட்டி அளித்திருப்பதும், அந்தப் பேட்டியில், மே மாதம் வரை தன்னுடைய ஆய்வுப்பணியை ஒத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருப்பதும்,  பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன. ஆளுநர் மாளிகையில் தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளும் ஏற்கனவே அளித்துள்ள புகார் மனுக்களை தூசு  தட்டினாலே, 2011 முதல் இன்றுவரை அ.தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ள இமாலய ஊழல் கொள்ளைகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  ஆதாரங்களுடன் தெரிந்து கொள்ளலாம்.

மாநிலத்தில் நிதி மேலாண்மை படுமோசமாகி நிதி நெருக்கடி நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் கண்டும்  காணாதவராக அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள், வேறு ஏதோவொரு எதிர்பார்ப்புடன் கூடிய அவரது தனிப்பட்ட உள்நோக்கத்தை  வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது. மாண்புமிக்க பொறுப்பில் உள்ள கண்ணியமான ஆளுநரிடமிருந்து இத்தகைய ஒரு கருத்தை தி.மு.கழகமும், தமிழக  மக்களும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு சவால்விடும் கருத்து என்பதையும், ஆளுநர் அதிசயமானதும், ஆரோக்கியக்  குறைவுள்ளதுமான சில முன்மாதிரிகளை உருவாக்கி வருவதையும் திமுக கண்டனத்துடன் பதிவு செய்கிறது.இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜிக்கு ஆதரவு
பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:மாநில கட்சியின் ஒற்றுமைக்கும், கூட்டாட்சிக்கும் திமுக என்றும் துணை நிற்கும். அதிகார மற்றும் ஜனநாயக விரோத கட்சியான பாஜகவிற்கு எதிராக  மாநிலகட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு நான் முழு ஆதரவளிக்கிறேன். என்று தனது டிவிட்டர் பக்கத்தில் திமுக  செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…