சென்னை: காவிரி நதிநீர் பிரச்னைகள் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிந்து வைத்திருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று காலை, சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் நன்றாக உணர்ந்தவர். குறிப்பாக காவிரி நதிநீர் பிரச்னைகள் குறித்து, அவர் மிக தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்.
எனவே டெல்லியில் வரும் 3ம் தேதி பிரதமர் தலைமையில் நடக்க உள்ள அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில் இப்பிரச்னை பற்றி, எடப்பாடி பழனிசாமி எடுத்துரைப்பார். அந்த கூட்டத்தில், ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என முதல்வர் கோரிக்கை விடுப்பாரா என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். நான், எப்படி கூற முடியும்.14வது நிதி கமிஷனில் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்திடம் வலியுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.