சென்னை: விஜயகாந்துக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விஜயகாந்த்திடம் நான் கேட்பது, தங்கள் பேட்டி உங்கள் வாயால் கூறப்பட்டதா அல்லது வேறு ஒருவருடைய காழ்ப்புணர்ச்சியின் வெறி உங்கள் வாயிலாக வெளிப்பட்டதா என்பதே. உங்கள் இயலாமையைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை வெறுப்பை நெருப்பாய் கக்கியது யார்.
கருணாநிதியை பார்க்க விடாமல் தடுத்தார் என நா கூசாமல் பேசி உள்ளீர்களே, எத்தனையோ பேர் காத்திருந்தாலும் அவர்களையெல்லாம் தாண்டி தலைவரிடம் உங்களை பேச வைத்து, வாசல் வரை வந்து, ஸ்டாலின் உங்களை வழி அனுப்பி வைத்த காட்சியை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.விஜயகாந்த் உங்கள் இயலாமையை உங்கள் குடும்பத்தாரே பயன்படுத்தி உங்களுக்கே உலை வைக்கும் விசித்திரத்தை பார்க்கிறோம். இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இப்போதும் உங்களுக்கு உண்டு என்று நம்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.