சென்னை: டீசல், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கச்சா எண்ணெய் விலை குறைந்த போது மத்திய அரசு கலால் வரியை பலமுறை உயர்த்தி டீசல், பெட்ரோல் விலை கொஞ்சமும் குறைக்காமல் அரசுக்கு அதிக லாபம் ஈட்டும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தது. விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கச்சா எண்ணெய் குறைந்த நேரமான 2014ம் ஆண்டு முதல் ஒன்பது முறை கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு கச்சா எண்ணெய் விலை உயரும் போது கலால் வரியை குறைக்க தயங்குவது ஏன்? அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பதை போல் டீசல், பெட்ரோலுக்கும் ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு உயர்த்திய கலால் வரியை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.