அகமதாபாத்: குஜராத்தில் அனல்மின் நிலையத்துக்காக தங்கள் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து, தற்ெகாலைக்கு அனுமதி கோரி 5,259 விவசாயிகள் கலெக்டருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.குஜராத்தின் பாவ்நகரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களை விரட்ட போலீசார் ஏவி விடப்படுகின்றனர் என்றும், எதிர்ப்பு தெரிவிக்கும் 12 கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்துவதால் தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்து, 5259 விவசாயிகள் தற்கொலைக்கு அனுமதி தரக்கோரி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுதொடர்பாக குஜராத் கேதுத் சமாஜ் அமைப்பின் உறுப்பினரான விவசாயி நரேந்திர சிங் கோக்கில் கூறுகையில், ‘‘குஜராத் அரசு மற்றும் மாநில மின் உற்பத்தி நிறுவனம் எங்களுடைய நிலங்களை பறித்துக்கொண்டதால் நாங்கள் முற்றிலும் வாழ்வாதாரம் இழந்துள்ளோம். 12 கிராமங்களில் விவசாயிகள் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர். இதனால் நாங்கள் தற்ெகாலை செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. எனவே எங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கோரி கலெக்டருக்கு கடிதம் எழுதி உள்ளோம்” என்றார்.
12 கிராம விவசாயிகள் எழுதியுள்ள இந்த கடிதத்தை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கும் அனுப்ப விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மின்நிலைய பணிகள் நடக்கும் இடத்தில் நேற்று 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் மனைவி, குழந்தைகளுடன் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திலும் கூடங்குளம் அணுமின்நிலையம், கதிராமங்கலம், நியூட்ரினோ ஆய்வு மையம் உள்ளிட்டவை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுவருவது போல் குஜராத்திலும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.