ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் எனக்கு பாதுகாப்பில்லை. மேலும், அதிமுக அமைச்சரால்தான் நான் தொகுதிக்கு வருவதில்லை என எம்எல்ஏ கருணாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை எம்எல்ஏவான நடிகர் கருணாஸ், நேற்று தனது தொகுதி குடிநீர் பிரச்னை தொடர்பாக, கலெக்டர் நடராஜனை சந்தித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வராக ஜெயலலிதா இருக்கும் வரை, நான் வாரந்தோறும் தொகுதிக்கு வந்து மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். அவர் மறைவுக்கு பின்னர் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதுவரை 159 மனுக்கள் கொடுத்துள்ளதில், 3 மனுக்களின் கோரிக்கை மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சரால்தான் நான் தொகுதி பக்கம் வருவதில்லை. தற்போது மாவட்ட நிர்வாகம் எனக்கு பாதுகாப்பு தர மறுக்கிறது என்றார்.