×

சரிவர கவனிக்காமல் மகன் திட்டியதால் விரக்தி பெற்றோர் விஷம் குடித்தனர் தந்தை சாவு: தாய் கவலைக்கிடம்

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே மகன் சரிவர கவனிக்காமல் திட்டி வந்ததால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்தனர். இதில் சிகிச்சை  பலனின்றி தந்தை இறந்தார். தாய் நிலை கவலைக்கிடமாக உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி(55). இவருடைய மனைவி சரசு(50).  இவர்களது ஒரே மகன் சண்முகம்(35), பால் வியாபாரி. இவருக்கு திருமணமாகி விட்டது. சுப்பிரமணி மகன் வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தார்.  இந்நிலையில், சண்முகம் பெற்றோரை சரிவர கவனிக்காமல் எப்போதும் திட்டிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுப்பிரமணி, சரசு ஆகியோர் இனிமேல் உயிர் வாழ்வதைக் காட்டிலும் சாவதே மேல் என எண்ணினர். இதையடுத்து, நேற்று  முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சண்முகம், தாய்-  தந்தை மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி நேற்று  இறந்தார். கவலைக்கிடமான நிலையில் உள்ள சரசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!