×

1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு

லக்னோ: நாட்டிலேயே முதல் முறையாக, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 1,000 சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. உ.பி.,யில் பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாத, 1,000 சட்டங்களை, உ.பி., அரசு பட்டியலிட்டுஉள்ளது. இந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்த மசோதா மூலம், ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உ.பி., மாநில சட்ட அமைச்சர், பிரிஜேஷ் பதக், நிருபர்களிடம் கூறியதாவது: பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட  பல சட்டங்கள் தற்போதைய காலத்துக்கு பொருந்தாதவையாக மாறியுள்ளன. இத்தகைய சட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம்.

இந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்தம் மூலம், ரத்து செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். உ.பி., அரசு ரத்து செய்யவுள்ள சட்டங்களில், 1890ல் உருவான, ஐக்கிய மாகாண சட்டமும் அடங்கும். இந்த சட்டத்தை, பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல், மேற்கு மாகாணங்கள் மற்றும் அவுத் பகுதியை சிறப்பாக நிர்வகிப்பதற்காக கொண்டுவந்தார். உ.பி., மாநிலம் உருவாகி, 68 ஆண்டுகள் ஆனதை, அம்மாநில அரசு, சமீபத்தில் கொண்டாடியது. அதை தொடர்ந்து, பிரிட்டிஷ் ஆட்சி கால சட்டங்களை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. நாட்டில், பிரிட்டிஷ் ஆட்சி கால சட்டங்கள், இவ்வளவு அதிகமாக ஒரே நேரத்தில் ரத்து செய்யப்படுவது, இதுவே முதல் முறை.

Tags :
× RELATED தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை...