விவசாய தம்பதிக்கு பிரபாஸ் பட நிறுவனம் நோட்டீஸ்

ஐதராபாத்: தெலுங்கில் சிறு பட்ஜெட்டில் ‘ஸ்பிரிட் இன் நாட் ஒன்’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை விவசாய தம்பதியினர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் ‘ஸ்பிரிட்’ என்ற பெயரில் பிரபாஸ் நடிக்கும் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். இவர், ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ படங்களை இயக்கியவர்.

தாங்கள் ‘ஸ்பிரிட்’ பெயரில் படம் தயாரிப்பதால், ‘ஸ்பிரிட் இன் நாட் ஒன்’ என்ற பெயரில் படம் எடுக்கக் கூடாது என பிரபாஸ் படத்தை தயாரிக்கும் நிறுவனம் விவசாய தம்பதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைப் பார்த்து அந்த தம்பதி அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் விவசாயியான நர்சம்மா கூறும்போது, ‘‘இந்த தலைப்பை பிரபாஸ் படத்துக்கு அவர்கள் வைக்கும் முன்பே நாங்கள் வைத்துவிட்டோம்.

அதை முறைப்படி பதிவு செய்துள்ளோம். ஆனால் அவர்களிடம் பணம் இருப்பதால் மிரட்டிப் பார்க்கிறார்கள். எங்களிடம் இது குறித்து எதுவும் பேசாமல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் சொத்துகளை விற்று இந்த படம் தயாரித்துள்ள எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி பிரபாசிடம் பேச நேரம் கேட்டிருக்கிறோம். இதற்கு நல்ல முடிவு கிடைக்கும். இல்லாவிட்டால், சட்டரீதியாக நாங்களும் படத் தலைப்புக்காக போராடுவோம்’’ என்றார்.

Related Stories: