சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கி 2022ல் வெளியான படம் `கட்டா குஸ்தி’. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ஜூலை 3ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் தொடர்பான நிகழ்வில், சினிமாவில் நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக இருப்பது குறித்து கேள்வி கேட்டபோது, அதற்குப் பதில் அளித்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
அவர் கூறும்போது, ‘‘ஆமிர்கான் இதற்கு ஒரு பேட்டியில் பதில் கூறி இருந்தார். சம்பளம் என்பது ஆண், பெண் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. உங்களால் எவ்வளவு டிக்கெட் விற்கிறது என்பதை மையப்படுத்தியது என்றார். எனக்காக அதிக டிக்கெட் விற்பனையாகும்போது, அதற்கான சம்பளத்தை நான் கேட்பேன். ஆனால் இப்போது யாருடனும் என்னை ஒப்பிட்டுக்கொள்ள விரும்பவில்லை. எனவே, இப்போது நான் அப்படி சம்பளம் கேட்க மாட்டேன், ஒருநாள் வரும், அப்போது கேட்பேன்’’ என்றார். விஷ்ணு விஷால் கூறும்போது, ‘‘கட்டா குஸ்தி முதல் பாகத்தில் பெண்ணியம் பேசப்பட்டது. அப்போது ஆதரவளித்த ஒரு சில பெண்கள், இப்போது இரண்டாம் பாகத்தில் ஆண்ணியம் பேசினால் எதிர்க்கிறார்கள். இரு தரப்பிலிருந்தும் பார்க்கும் நேரான பார்வை தேவை’’ என்றார்.

