சென்னை: கன்னட முன்னணி இயக்குனரும், கர்நாடக அரசு விருது பெற்றவருமான தயாள் பத்மநாபன் எழுதி இயக்கியுள்ள படம், ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’. ஜூன் 25ம் தேதி திரைக்கு வருகிறது. 2எம் சினிமாஸ், டி பிக்சர்ஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரித்துள்ளார். வெற்றி, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிசி ஆண்டனி, லோஹன் கண்ணன், நர்மதா, ‘அருவி’ மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி, சுப்பிரமணியம் சிவா நடித்துள்ளனர். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாள் பத்மநாபன் பேசியதாவது:
1972ம் ஆண்டு பின்னணியில் படம் உருவாகியுள்ளது. மரண தண்டனை கைதியின் வாழ்க்கையில் ஒரு இரவை மையமாக வைத்து, அவனது கடந்த காலத்தை திரும்பி பார்க்கும் கதை இது. மரண தண்டனை தேவையா? தேவை இல்லையா என்று தீர்ப்பு சொல்லாமல், அதை ரசிகர்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன். எனது தனிப்பட்ட கருத்து, மரண தண்டனை கூடாது என்பதே. குற்றம் செய்ய தூண்டிய விஷயம் எது என்று கண்டுபிடித்து, குற்றவாளியை திருத்த முயற்சிக்க வேண்டும். மற்றபடி, தமிழ் திரைத்துறையை சேர்ந்த லஷ்மிகாந்தன் கொலை வழக்கிற்கும், இப்படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
