சென்னை: பாடலாசிரியரும் நடிகருமான ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள ‘ஈரம் காயாத கதைகள்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர், ‘‘நான் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் என்னுடைய எந்த திரைப்படத்திற்கும் வெற்றி விழா நடத்தியது கிடையாது. என்னுடைய படங்களின் இசை வெளியீட்டிற்கு எனது குடும்பத்தினர் வந்ததே கிடையாது. ஏனென்றால் அவர்கள் என்னை தூரமாகத்தான் வைத்திருந்தார்கள்.
என்னை அவர்கள் ஆதரிக்கவில்லை என்றாலும் தொந்தரவு செய்யாமல் இருந்தனர். அடுத்ததாக என்னுடைய மனைவி இதுவரை எந்த நடிகரையும் பார்க்க வேண்டும் எனக் கேட்டதில்லை. ஒன்றே ஒன்று மட்டும் கேட்டார். பருத்திவீரன் பட சமயத்தில் சிவகுமாரை பார்க்க வேண்டும் எனக் கேட்டார். நானும் படம் முடிந்தவுடன் கூட்டி போகலாம் என நினைத்தேன். ஆனால் படம் முடியும் சமயத்தில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு வரைக்கும் இதை சிவகுமார் சாரிடம் சொன்னதே கிடையாது’’ என்றார்.
