சண்டிகர்: சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பொது இடங்களில் நடமாடும் தெருநாய்களை அப்புறப்படுத்தும் பணிகளை பஞ்சாப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பொது இடங்களில் தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, கடுமையாக பாதிக்கப்பட்ட தெருநாய்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகை ரவீணா டாண்டன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்றாலும், விலங்குகளின் நலனிலும் அரசு அதிக அக்கறையை காட்ட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை மனிதநேயத்துடன் அணுகியாக வேண்டும். தெருநாய்களை அகற்றுவதற்கு பதிலாக கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்துவதே நிரந்தர தீர்வாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், ‘விலங்குகளுக்கு முறையான காப்பகங்களை ஏற்படுத்தி, அவற்றுக்கு மறுவாழ்வு தர அரசு முன்வர வேண்டும். ஊமையாக இருக்கும் விலங்குகளை நாம் நடத்தும் முறையே நம்முடைய சமூகத்தின் பண்பை பிரதிபலிக்கும். இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு முன்னுதாரணமாக திகழ்ந்திட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
