மும்பை: தென்னிந்திய மொழிகளை தொடர்ந்து பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்துள்ள சாய் பல்லவி, சமீபத்தில் ஆமிர் கான் மகன் ஜுனைத் கானுடன் நடித்த ‘ஏக் தின்’ என்ற இந்தி படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அவர், அதிக பட்ஜெட்டில் 2 பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ என்ற பன்மொழி படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். ‘ஏக் தின்’ படத்தில் சாய் பல்லவி இந்தியில் டப்பிங் பேசினார். ஆனால், இதற்கு பாலிவுட்டில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அதாவது, சாய் பல்லவி பேசிய இந்தி வசனங்களின் உச்சரிப்பு சரியில்லை என்றும், அவரது டப்பிங் திரையில் ஓடும் காட்சிகளுக்கு பொருத்தமாக இல்லை என்றும் கமென்டுகள் வெளியானது.
இதையறிந்த சாய் பல்லவி கோபம் அடைந்தார். அவர் எந்த மொழி படத்தில் நடித்தாலும், தனது கேரக்டருக்கு தானே டப்பிங் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வது வழக்கம். அதுபோல், ‘ராமாயணா’ படத்துக்கும் இந்தியில் தனது கேரக்டருக்கு டப்பிங் பேச அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரது விருப்பத்தை புறக்கணித்த இயக்குனர் நிதேஷ் திவாரி, சாய் பல்லவிக்கு வேறொருவரை பேச வைக்க முடிவு செய்துள்ளார். இதனால் சாய் பல்லவி கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
