என்னை கண்டாலே பாண்டிராஜுக்கு பிடிக்காது: சொல்கிறார் மிஷ்கின்

 

சென்னை: பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள திரில்லர் காமெடி படம், ‘பரிமளா அண்ட் கோ’. இது அவரது 12வது படமாகும். ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சிங்கம்புலி, பக்ஸ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், பூர்ணிமா ரவி நடித்துள்ளனர். சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ், தமிழ்குமரன் புரொடக்‌ஷன்ஸ் பி.லிட், பசங்க புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, பாக்ஸ்’ன் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் குமார் இசை மேற்பார்வை செய்ய, பிரதீப் இ.ராகவ் எடிட்டிங் செய்துள்ளார்.

இப்படத்தின் நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசுகையில், ‘சிறந்த நடிகர்களான ஜெயராம், ஊர்வசி ஆகியோருடன் இணைந்து நடிப்பது என்பது எனக்கு மிகப்பெரிய கனவு. சாவித்திரி காலில் விழ நினைத்தேன். அது நடக்கவில்லை. நான் ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கும் ஊர்வசி காலில் விழுந்து வணங்கினேன். பாண்டிராஜுக்கு முதலில் என்னை கண்டாலே பிடிக்காது. பிறகு பழகி பேசியதும் நண்பனாக ஏற்றுக்கொண்டார். ஒரு தயாரிப்பாளர் பணம் கொடுக்கிறார். நான் அவருக்கு வெற்றிப் படம் தரவேண்டும். அதேவேளையில், 2 மணி நேரம் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்’ என்றார்.

 

Related Stories: