சென்னை: கோலிவுட் வட்டாரங்களில் புதுமுக நடிகர், நடிகை தேர்வு நடத்தி மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் பல காலமாக சுற்றி வருகின்றன. பிரபலமான நிறுவனத்தின் பெயரில் சமூகவலைதளங்களில் போலியாக அறிவிப்புகளை வெளியிட்டு, ஆடிஷன் நடத்துகிறேன் என்கிற பெயரில் இவர்கள் நடத்தும் மோசடிகளால் சினிமா புரொடக்ஷன் நிறுவனங்கள் அவப்பெயரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. வாய்ப்பு கேட்டு வருபவர்களிடமே பணம் பறிப்பது, பெண்களிடம் ஆடிசன் என்கிற பெயரில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது என பல்வேறு குற்றங்கள் நடக்கிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் சார்பில் அறிக்கை ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் ‘‘எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர்களை இயக்குனர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ, காஸ்டிங் ஏஜென்ட்களோ அல்லது வேறொரு நபர்களோ தேர்ந்தெடுப்பதில்லை.
எஸ்கே புரொடக் ஷன்ஸ் வெளியிடும் எந்த ஒரு அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் மட்டும் தான் வெளியிடப்படும். இது தொடர்பாக வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள், அழைப்புகள் அல்லது சமூக வலைத்தளங்களை நம்ப வேண்டாம்’’ என கூறப்பட்டுள்ளது.
