ஐதராபாத்: இந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான தாசரி நாராயண ராவின் பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஐதராபாத்தில் இயக்குனர்கள் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடியது.
ஆண்டுதோறும் ஒரு மரியாதையாக நிறுவப்பட்ட இயக்குனர்கள் தினம், திரைப்படத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் இயக்குனர்களின் படைப்புப் பார்வை, தலைமைத்துவம் மற்றும் கலாச்சாரத் தாக்கத்தை அங்கீகரித்து கொண்டாடுகிறது. தெலுங்கு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் வி. என். ஆதித்யா, பொதுச் செயலாளர் பி. வி. ராம ராவ் மற்றும் பொருளாளர் சாய் ராஜேஷ் ஆகியோர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் மற்றும் கன்னட இயக்குநர்கள் சங்கங்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்தியத் திரைப்படத்துறைக்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக இயக்குனர் ஆர். பால்கிக்கு தாசரி தேசிய விருது வழங்கப்பட்டது. திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் திறமையை அங்கீகரிக்கும் வகையில், ‘கோர்ட்’ படத்தின் இயக்குனர் ராம் ஜெகதீஷுக்கு தாசரி அறிமுக இயக்குனர் விருது வழங்கப்பட்டது.
சங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, மோகன் பாபு ரூ.15 லட்சம் நிதியுதவியை அறிவித்து, இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘தாசரி நாராயண ராவுடன் எனக்கிருந்த ஆழமான தனிப்பட்ட மற்றும் தொழில்முறைத் தொடர்பு மறக்க முடியாதது. எனது வழிகாட்டியான அவரது இழப்பு இன்றும் ஆழமாக உணர்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் மாற்றியமைத்த தந்தை போன்றவர் அவர்’’ என்றார்.
