புதுடெல்லி ‘சர்கே சுனார் தேரி சர்கே’ என்ற இந்தி பாடல் தொடர்பான சர்ச்சை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணைக்கு நோரா பதேஹி ஆணையத்தில் ஆஜரானார்.
கன்னடத்தில் உருவான பான் இந்தியா படமான ‘கேடி: தி டெவில்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘சர்கே சுனார் தேரி சர்கே’ என்ற பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் மிகவும் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், பாலியல் உணர்வை தூண்டும் விதமாக இருப்பதாகவும் நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. பாடலில் இருக்கும் ஆபாசம் மற்றும் பெண்களை அநாகரீகமாக சித்தரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இப்படலில் நடனமாடிய நோரா பதேஹி, சஞ்சய் தத் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சம்மன் அனுப்பியது. இந்த விசாரணை தொடர்பாக நேற்று நோரா பதேஹி தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜரானார்.
இப்பாடல் சர்ச்சை தொடர்பாக ஏற்கனவே சஞ்சய் தத் ஆணையத்தில் ஆஜராகி, எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோரி, எதிர்பாராவிதமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வருத்தத்தை தெரிவித்தார். மேலும், 50 பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி அளிப்பதாக சஞ்சய் தத் உறுதியளித்தார்.

