சென்னை: ஆபாசமான ஆங்கிள்களில் புகைப்படம் எடுப்பதற்கு ருக்மணி வசந்த் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திவ்யா ஸ்பந்தனா, ஆஷிகா ரங்கநாத், சப்தமி கௌடா ஆகியோரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது குறித்து தனித்தனியே தங்களது இன்ஸ்டாவில் அவர்கள் கூறியிருப்பதாவது: விழாக்களுக்கு எந்த மாதிரியான உடை அணிந்து வருவது என்பது தனிமனித சுதந்திரம்.
ஆனால் நாங்கள் புடவை கட்டி வந்தாலும் கூட, அப்போது உடல் அங்கங்களை ஜூம் செய்து புகைப்படம் எடுக்கும் போக்கு, அதிர்ச்சி தருகிறது. சில சமயங்களில் கிளாமர் தேவை என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே கூறும்போது, கிளாமர் உடையில் வந்தாலும் இதே நிலைதான். நடிகைகளை ஆபாசமாக சித்தரிப்பது அதிகரித்துவிட்டது.
இதை துளி அளவும் ஏற்றுக்கொள்ள முடியாது. சில தனிநபர்கள் செய்யும் இதுபோன்ற செயல்களால் எங்களால் எங்கும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இதை சம்பந்தப்பட்ட விழாக்களை நடத்துபவர்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. இதனால் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறோம். இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
