சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தனுஷ் பேசுகையில், ‘படப்பிடிப்பு இல்லை என்றால் புத்தகம் படிப்பேன், படம் பார்ப்பேன், எனது மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் விளையாடுவேன். ஆனால், ஓய்வு என்பது மிகவும் அபூர்வமாகத்தான் கிடைக்கும். குழந்தைகளுக்கு வீடியோ கேம் விளையாடுவது பிடிப்பது போல், எனக்கு தொடர்ந்து பணியாற்றிக்கொண்டே இருப்பது பிடிக்கும். எனவே, நடிக்க செல்வது வேலைக்கு செல்லும் உணர்வை கொடுக்காது. எப்போதுமே ஜாலியாகத்தான் சென்று வருவேன்.
எல்லா ஜானர் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். `குட்டி’, `உத்தமபுத்திரன்’ போன்ற படங்களில் நடிக்க இப்போது பல இளம் நடிகர்கள் வந்துவிட்டனர். அதுபோன்ற படங்களில் அவர்கள் நடிக்கட்டும். நான் வேறு மாதிரி முயற்சிக்கிறேன். நான் நடிக்க இருக்கும் ‘வட சென்னை 2’ படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். அவர் இது தனது கனவுப்படம் என்று சொல்கிறார். அதுபற்றி இப்போதே நிறைய பேசிவிட வேண்டாம். பள்ளி மற்றும் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும். நான் கல்லூரிக்கு செல்வதற்கு முன்பே நடிகனாகி விட்டேன்.
கல்லூரிக்கு சென்று வந்த எனது நண்பர்கள், ‘படித்துவிட்டு வேலைக்கு சென்றால், நாம் நினைத்த மாதிரி வாழலாம்’ என்றனர். எல்லாவற்றையும் கடந்து வாழ்க்கைக்குள் நுழையும்போது, பள்ளி மற்றும் கல்லூரி காலம்தான் வாழ்க்கையில் மிகச்சிறந்த காலம் என்று புரியும். பிறகு நடக்கும் எதுவும் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. அழகான நாட்களை வெறுமனே கடந்து செல்லாமல், ஒவ்வொரு நாளும் அனுபவித்து வாழுங்கள். இதுதான் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான பகுதி’ என்றார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் `போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்க, தனுஷ் நடித்துள்ள `கர’ படம், வரும் ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வருகிறது.
