நேர்மையின் காரணமாக அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாக், ஒரு சந்தேக மரணம் குறித்து விசாரணை நடத்துகிறார். அடுத்த நாள் அப்பகுதியில் கழுத்தறுபட்ட நிலையில் ஒரு ஆண் கொலை செய்யப்படுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ். ஆனந்த் நாக்கிற்கு போலீஸ் வேடம் நன்கு பொருந்துகிறது. ஆனால், வசனங்கள் பேசியே விசாரணை நடத்துவது நெருடுகிறது. ஜனனி குணசீலன் இயல்பாக நடித்துள்ளார். தோழியின் பிடியில் சிக்கி உயிருக்கு போராடும்போது நன்கு பயந்திருக்கிறார். மற்றும் ‘பாய்ஸ்’ ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், குருமூர்த்தி ஆகியோர், இயக்குனர் சொன்னதை செய்துள்ளனர்.
சஸ்பென்ஸ் கிரைம் திரில்லருக்கு ஏற்ற ஒளிப்பதிவை யஷ்வந்த் பாலாஜி வழங்கியுள்ளார். கார்த்திக் ராம் எரா பின்னணி இசை ஓரளவு பயமுறுத்துகிறது. எடிட்டர் ஆர்.சத்யமூர்த்தி பணி குறிப்பிடத்தக்கது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதி இயக்கியுள்ள எஸ்.அருண் பிரசாத், காவல் நிலைய விசாரணை சம்பவங்களை ஒரே பாணியில் கையாண்டது சோர்வடைய வைக்கிறது. கொலையாளி யார்? கொலைகளுக்கான பின்னணியில் மறைந்துள்ள சமூக பிரச்னை மற்ற விஷயங்களை மறக்க வைக்கிறது. முற்பகுதியை விட பிற்பகுதி விறுவிறுப்பாக இருக்கிறது.
