ஐதராபாத்: சிரஞ்சீவியின் தம்பியான நாகபாபுவும் நடிகராக உள்ளார். இவரது மகளான நிஹாரிகா, தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் ராம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். தெலுங்கில் பல படங்களில் நடித்தார். 2020ம் ஆண்டு குண்டூர் மாவட்டத்தின் ஐஜி மகனான சைதன்யாவுடன் நிஹாரிகாவுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் 2023ம் ஆண்டு இந்த தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் பேசப்பட்டது. இதுதொடர்பாக நிஹாரிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார்.
அதில், ‘‘விவாகரத்து பெற்றதும் பலரும் என்னை ஏளனம் செய்தார்கள். என்னைப் பற்றி தப்பாக பேசினார்கள். விவாகரத்து செய்யும் முடிவு என்பது சாதாரண முடிவு கிடையாது. ஒரு திருமணத்துக்கு பின்னால் பெற்றோரின் வலி, பாசம், பணம், உழைப்பு எல்லாமே அடங்கியிருக்கிறது. விவாகரத்து பெற்று விட்டேன் என தெரிந்த பிறகு என்னைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வெளியானது. அதேபோல் முட்டாள்தனமான கருத்துகளை பலரும் பேசினார்கள்.
என்னை விமர்சித்தவர்கள் என் குணத்தை தவறாக பேசினார்கள். என் குடும்பத்தை அவதூறாக பேசினார்கள். திருமணம் செய்துக் கொள்ள நினைப்பவர்கள் அதற்கு முன் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது மிக முக்கியம்’’ என நிஹாரிகா கூறியுள்ளார்.
