பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம்

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் பாகம் -1, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஷோபிதா, கிஷோர், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் கல்கி எழுதிய வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை அடிப்படையாகக் கொண்டு படம்.   பல வருடங்களாக எத்தனையோ பேர் எடுக்க முயன்று, பலருக்கும் எட்டாக் கனியாகிப் போன கதை இன்று இயக்குநர் மணிரத்னத்திற்கு சாத்தியப்பட்டிருக்கிறது.  ‘சுந்தரச் சோழனின்’(பிரகாஷ் ராஜ்) வாரிசுகளாக ஆதித்த கரிகாலன் (விக்ரம்), குந்தவை(த்ரிஷா), அருண்(ள்)மொழி வர்மன்(ஜெயம்ரவி). ராஷ்டகூடர்களுடனான போரில் வெற்றிக்கண்ட்ட ஆதித்த கரிகாலன் வந்தியத் தேவனை(கார்த்தி) அழைத்து தஞ்சை நிலவரம் கண்டு வரச் சொல்லி அனுப்புகிறார்.   அங்கே ஆதித்த கரிகாலனுக்கு எதிராக சதித் திட்டம் நடப்பதை தெரிந்துகொள்ளும் வந்தியத்தேவன் இளவரசி குந்தவை, மற்றும் சுந்தரச் சோழனிடம் தகவலைச் சொல்கிறார். குந்தவை ’தஞ்சை நிலவரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சென்று என் தம்பி அருண்மொழி வர்மனிடம் விஷயம் சொல்லி கையோடு அழைத்து வாருங்கள்’ என செய்தி தருகிறார். இதற்கிடையே பல பிரச்னைகள், இடையூறுகள், சதிகள் என சென்றுகொண்டிருக்கிறது. இடையில் வஞ்சம் தீர்க்கும் பெண் நாகமாக வீற்றிருக்கிறார் ராணி நந்தினி(ஐஸ்வர்யா ராய்). இந்த அத்தனை சதி வலையும் சோழ அரசாங்கத்தை என்ன செய்தது, ஏன் சதி , ஏன் வஞ்சம் என இத்தனைக்கும் முடிவு என்ன என்பது மீதிக் கதை.   சோழ மன்னர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி. ஆர்ப்பரிக்கும் வெற்றி வேந்தனாக கொடி நாட்டும் விக்ரம் ஒரு பக்கம் எனில், ஆர்ப்பாட்டமே இல்லாமல் நின்று விளையாடி கண்களால் கவனித்து களமாடும் ஜெயம் ரவி இன்னொரு பக்கம் என இருவரும் கதையை ஆள்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரையும் ஓரம் கட்டி ஒண்டிக்கொண்டி நின்று நீச்சலடித்து கதைமாந்தனாக திகழ்கிறார் கார்த்தி.   துடுக்கான பேச்சும், மிடுக்கான தோரணையுமாக வரும் கார்த்திக்கு ஈடுகட்டி நக்கலடிக்கிறார் ஜெயராம். குந்தவைப் பிராட்டி அழகில் அதிரூப சுந்தரி, சுதந்திரமாக சுற்றித் திரியும் சோழ அரசின் சுடர்கொடியாக ஆங்காங்கே கல்லெரிந்து கபடமாடும் கட்டழகி. அதற்கேற்ப த்ரிஷா அச்சு அசலாகப் பொருந்திப்போகிறார்.   மயக்கும் வஞ்சகி, பல மன்னர்களை பார்வையிலேயே வீழ்த்தும் மாயதேவி, அழகுக்கெல்லாம் அரசி, பெண்களே பொறாமைப் படும் பேரழகி என கல்கி எழுதிய அத்தனை அம்சங்களுக்கும் அச்சுக் குலையாத நந்தினியாக ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா ராய். பெரிய பழு வேட்டையராக சரத்குமார் ஒரு பக்கம் சதி, இன்னொரு பக்கம் காதல் என இந்த வயதிலும் மனிதர் கெத்துதான்.   இவர்கள் மட்டுமின்றி பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, கிஷோர், ரகுமான் இப்படி படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் நம் மனதில் நிற்க தவறவில்லை. படகோட்டியாக சில நிமிடங்கள் வந்தாலும் அழகோவியமாய், அருண்மொழி வர்மனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாய் பூங்குழலி கேரக்டரில் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக வரும் ஷோபிதா என படம் முழுக்க கேரக்டர்கள் குறித்து விமர்சிக்கவே தனி விமர்சனம் தேவைப்படும்.   மணிரத்னம் கண்ட கனவிற்கு அழகான ஓவியம் தீட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், அதற்கு வண்ணங்கள் பூசி உயிரையும் சேர்த்து பாய்ச்சியிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ‘பொன்னி நதி பார்க்கணுமே’, ‘தேவராளன் ஆட்டம்’, ‘அலைகடல் ஆழம்’ என பாடல்களும் விதவிதமாக நம்மை சோம பானமாக மயக்குகின்றன.  சிற்சில மாற்றங்கள் இருப்பினும் புத்தகம் படிக்காத மக்களுக்கும் கூட ஒரு முழுமையான முதல் பாகம் கொடுத்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்ப்பார்பையும் கொடுத்திருக்கும் மணிரத்னம் உண்மையில் மாஸ்தான். படமாக, புத்தகமாக என யோசிக்காமல் இது நம் மண்ணின் வரலாறு, நம்மை ஆண்ட மக்களின் வரலாறு என யோசிக்கும் போது எத்தனையோ வருட கனவு இன்று நிஜமாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.   இந்தியில் பத்மாவத், பாஜிராவ் மஸ்தாணி, இந்தப்பக்கம் ‘பாகுபலி’, மலையாளத்தில் ‘மரக்கையர்’ என அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும் போது என்றோ ‘நாடோடி மன்னன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘மகாதேவி’ என ஆரம்பித்து வைத்த நாம் அமைதியாக இருப்பது ஏன்? என்னும் கேள்விக்கு விடையாக ‘பொன்னியின் செல்வன்’ படம் மீண்டும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. இப்படியான காவியங்கள் எத்தனையோ தமிழில் இருக்க இனி இது ஒரு தொடக்கமாகட்டும்.  மொத்தத்தில் ‘பொன்னியின் செல்வன் பாகம் -1’ பார்த்தே ஆகவேண்டிய நம் வரலாறு.

Related Stories: