ஜான்பூர்: நடிகர் அஜய் தேவ்கன் நடித்த படத்தில் குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் விதமாக கருத்துகள் உள்ளதாக கூறி உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன் - சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘தேங்க் காட்’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 24ம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட மதப் பிரிவினரை புண்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மான்ஷுஸ்ரீவஸ்தவாவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ‘இந்திர குமார் இயக்கத்தில் வெளியாகும் ‘தேங்க் காட்’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் கோட் சூட் அணிந்தபடி, தன்னை சித்ரகுப்தனாக சித்தரித்து நடிகர் அஜய் தேவ்கன், குறிப்பிட்ட பிரிவினரை புண்படுத்தும் விதமாக நடித்துள்ளார். சித்ரகுப்தன் என்பவர் கர்மாவின் இறைவனாகக் கருதப்படுகிறார். அவர் ஒவ்வொரு மனிதனின் பாவ, புண்ணிய செயல்களின் பதிவுகளை வைத்திருப்பார். ஆனால் இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணையை வரும் நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.