சென்னை: ஆஸ்கர் விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கர் விருது பட்டியலில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடந்தது. இதில் சர்தார் உதம், ஷேர்னி தமிழ் படங்களான கூழாங்கல், மண்டேலா உள்ளிட்ட 14 திரைப்படங்கள் பட்டியலில் இருந்தன. 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் பார்த்தனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் கூழாங்கல் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை தான் ஆஸ்கருக்கு அனுப்ப தேர்வு செய்துள்ளதாக சாஜி என்.கருண் தெரிவித்திருக்கிறார். இப்படத்தை வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.